பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம்.

Unknown
0
பேராவூரணி பேரூராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வாய்க்காலில் அடைபட்டுக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி பேரூராட்சியைச் சேர்ந்த 1 ஆவது வார்டுக்குட்பட்ட ஆஸ்பத்திரி ரோடு, தேவதாஸ் ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பல நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மாதம் ஒருமுறையோ, இருமுறையோ மட்டுமே அகற்றப்படுவதாகத் தெருவாசிகள் புகார் கூறுகின்றனர். சில நேரங்களில் குப்பைகளை ஓரளவிற்கு மட்டுமே அகற்றும் பேரூராட்சி பணியாளர்கள், குப்பைகளை ஒன்றாகக் குவித்துத் தீ வைத்துச் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் சிதறிக் கிடக்கும் பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின் உள்ளிட்ட கழிவு குப்பைகளால் சாலையில் செல்வோர் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. தற்போது லேசான மழை பெய்துள்ள நிலையில் குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதால், குடியிருப்பு பகுதிகளில் புகை மண்டலம் உருவாகிச் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தெருக்களில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும் எனவும், தினசரிக் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்கடையால் அவதி

குறிப்பாகச் சிதம்பரம் ரோடு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் மண் கலந்து வாய்க்கால் அடைபட்டுக் கிடக்கிறது. சில வீடுகளின் கழிவுநீர் சட்டவிரோதமாக இவ்வாய்க்காலில் விடப்படுவதாலும், தண்ணீர் செல்ல வழியின்றி அடைபட்டுத் தேங்கி, சாக்கடையாக மாறிவிட்டது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகிப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் உறங்க முடியாத நிலை உள்ளது. அருகிலேயே பொதுக் குடிநீர் குழாய் இருப்பதும், சாக்கடை கழிவு வாய்க்கால் மீது சிமெண்ட் பலகை அமைத்து, குடிநீர் குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துச் செல்லும் அவலமும் உள்ளது.

சாக்கடைக் கழிவு நீர் வாய்க்கால் அருகிலேயே குடிநீர் குழாய் இணைப்புகளும் செல்கிறது. எனவே குடிநீரில் சாக்கடை கலந்து மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள சாக்கடையாக மாறி விட்ட மழைநீர் வடிகால் வாய்க்காலைச் சுத்தம் செய்து தரவும், அடைபட்டுக் கிடக்கும் குப்பைகளை அகற்றித் தரவும், பொதுமக்கள் கழிவுநீரை வாய்க்காலில் விடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top