பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு

Unknown
0
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஜஸ்டின் அண்மையில் ஆய்வு செய்தார். பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் காலகம் கிராமத்தில் நீர் பற்றாக்குறையினால் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாத இடத்தில் நெல்லுக்கு மாற்றாக உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த 3 ஏக்கர் பரப்பினை பார்வையிட்டு உளுந்து சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் டிஏபி மற்றும் திரவ உயிர் உரங்களை உடனுக்குடன் வழங்கிட அறிவுறுத்தினார்.
பின்னர் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து வரும் இடுபொருள் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். இதுவரை நெல் சாகுபடிக்கான திரவ உயிர் உரங்கள் 500 ஏக்கர் பரப்பளவிற்கும் நெல் நுண்ணூட்டம் 168 ஏக்கர் பரப்பளவிற்கும், சிங்க் சல்பேட் 450 ஏக்கர் பரப்பளவிற்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
குறுவை நெல் சாகுபடிக்கு மாற்றாக உளுந்து சாகுபடிக்கு இதுவரையில் 538 ஏக்கர் பரப்பளவிற்கு 4300 கிலோ உளுந்து சான்று விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதையும், டிஏபி உரம் 500 ஏக்கர் பரப்பளவிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்து ஜூலை 31-க்குள் குறுவை தொகுப்புத் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் பணிபுரிந்து அளிக்கப்பட்ட இலக்கினை தொய்வின்றி அடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பேராவூரணி வட்டார உதவி இயக்குநர் ஆர். மதியரசன், வேளாண்மை அலுவலர் சு. ராணி, உதவி அலுவலர் என். சாந்தஷீலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top