
பிரச்சார கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகளின் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசும் போது, காவிரி டெல்டா விவசாயத்தை அழித்து விட வேண்டும் என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் உலக பெரு முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து மும்முனை தாக்குதல்களை துவங்கி இருப்பது அதிர்சியளிக்கிறது. இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தனது வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்ப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு ஓஎன்ஜிசி மூலம் கச்சா, இயற்கை எரிவாயு, பாறை எரிவாயு எடுப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் மூலம் மன்னார்குடி மீத்தேன் , நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயுக்கள் எடுப்பதற்கும் முழு அனுமதிகளை வழங்கி நிலங்கள் கையகப்படுத்தும் மறைமுக நடவடிக்கைகளில் எடுபட துவங்கியுள்ளது. இந்நடவடிக்கையானது ஒட்டுமொத்த காவிரி டெல்டாவை அழித்து விட்டு விவசாயிகளை அகதிகளாக்க முயற்சிப்பதாகும். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை தர மாட்டோம் என்பதை ஒத்தக் கருத்தாக டெல்டாவில் அனைத்து கிராமங்களிலும் முடிவெடுக்க வேண்டும். வரிகொடா இயக்கம் போல் நிலம் கொடா இயக்கத்தை துவங்கவேண்டும். மேலும் புதுக்கோட்டை , தஞ்சை ஆகிய இரு மாவட்டங்களில் 38 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட கிணறு
அமைக்கப்பட உள்ளன. இது அமைய பெற்றால் பேராவூரணியே அழியும் நிலை ஏற்படும் எனவே விவசாயிகளாகிய நாம் ஒன்றிணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க பாடுபட வேண்டும் என்று கூறினார்.கடலூர் மண்டலத் தலைவர் விநாயகமூர்த்தி, நாகை எஸ்.ராமதாஸ் .திருவாரூர் சோம.தமிழார் வன், சேரன்குளம் சு.செந்தில்குமார், கொள்ளிடம் விஸ்வநாதன், பிச்சாவரம் கண்ணன் ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருத்துறைப்பூண்டி மகேந்திரனின் நாட்டுப்புற விழிப்புணர்வு பிரச்சார பாடல்கள் பாடப்பட்டது.
நன்றி:அதிரை வானவில்