காரைக்குடி-பேராவூரணி-திருவாரூர் ரயிலை விரைந்து இயக்க வேண்டும் பயனாளிகள் சங்கம் வலியுறுத்தல்.

0

காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை விரைந்து துவங்க வேண்டுமென பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காரைக்குடி- திருவாரூர் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை முறையாக ரயில் சேவை துவங்கப்படாததால் இப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான 76 கி.மீ தூரத்தில் முதல்கட்ட அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ரயில்வே உயர் அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை  சந்தித்து வலியுறுத்திய நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே திங்கள், வியாழன் என வாரம் 2 நாட்கள் டெமோ ரயில் சேவை நடந்தது. மீதமிருந்த பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அதிவேக ரயில் சோதனை நடத்தி காரைக்குடி- திருவாரூர் இடையே ரயிலை இயக்கலாம் என அனுமதி வழங்கினார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக டெமோ ரயிலும் இயக்கப்படாமல் உள்ளது.

பேராவூரணி ரயில் நிலையத்தில் ரயில் சேவை இயக்கப்படாததால் அதிகாரிகள் வராமல் அலுவலகங்கள் பூட்டி கிடக்கின்றன. அலுவலக கண்ணாடிகள் சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட 9க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் கஜா புயலில் சேதமடைந்த நிலையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் முழுமையாக மின் இணைப்புகள் வழங்கப்படாததால் ஆங்காங்கே மின் கம்பங்களில் இருந்து மின் வயர்கள் அறுந்து தொங்குகின்றன. இதுகுறித்து பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காரைக்குடி - திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றிருப்பதால் இவ்வழி தடத்தில் தினசரி ரயிலை இயக்க வேண்டும். வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் உட்பட அனைத்து பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு கணினி முன்பதிவு மையம் அமைப்பதோடு, பர்த் வசதி எண்ணிக்கை விபரத்தை தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக ரயிலை இயக்காவிட்டால் அனைத்து பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்  என்றனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top