விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்.

IT TEAM
0

தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே பீடமும், நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன.


பேராவூரணியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள விளங்குளம் ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய கோபுரத்தினுள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். எதிரே பீடமும் நந்தி பகவானின் தனி மண்டபமும் உள்ளன. கால் ஊனம் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனிபகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தாதேவி, ஜேஷ்டாதேவி இருவரையும் மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார்.


ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான் விளாமரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பாதையை கடக்கும்போது ஓர் இடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அது சித்திரை திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரம், சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாளாகும். உடனே அங்கு மறைந்திருந்த ‘பூச ஞான வாவி’ என்ற ஞான தீர்த்தம் சுரந்து சனிபகவானை மேலே எழுப்பி கரை சேர்ந்தது. இதனால் சனிபகவானின் கால் ஊனம் நிவர்த்தியானது. விளாவேர் தடுக்கி சனிபகவான் விழுந்ததால் சுரந்த ஞான வாவி தீர்த்தம் குளமாக உருவானது. அதனால் இந்த கிராமம் விளம்குளம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி விளங்குளம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

அட்சய திருதியை நாளில் அட்சயபுரீஸ்வரரால் ஊனம் நிவர்த்தி பெற்ற சனிபகவான் கிழக்கு பிராகாரத்தின் வடதிசையில் தனி ஆலயத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எமபயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகள் செயலற்றுப் போகவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இங்கு சனிபகவான் அருள்பாலிக்கிறார். சனிதோஷம் உள்ளவர்களும், சனிகிரக பாதிப்பு உள்ளவர்களும், சனிபகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்துவிட்டு பிராகாரத்தில் காக்கையை அழைத்து உணவு படைக்கின்றனர். காக்கைகள் அந்த உணவை உட்கொண்டால் அவர்களது சனிதோஷம் அறவே விலகிவிட்டது என்று பொருளாம்! ஒருவேளை அந்த உணவைத் தொடாமல் பறந்துபோனால் தோஷம் விலகவில்லை என்று அர்த்தமாம்!


இத்தகையவர்கள் மறுபடியும் சனிபகவானைத் தேடி வந்து பிரார்த்தனை செய்து உரிய பயனைப் பெறுவது வழக்கமாக உள்ளது. இங்குள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சந்நதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் தண்டத்தையும், மேல் இடதுகரத்தில் தாமரையையும் ஏந்தி கீழ் இருகரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். அருகிலுள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகர், வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் ஆகியோர் காட்சி அருள்கின்றனர். கருவறையில் இறைவன் அட்சய புரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவயாக கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் தரிசனம் அருள்கின்றனர். திருச்சுற்றில் தென்கிழக்கில் வன்னி மரமும், தென் திருச்சுற்றில் ஆலய திருக்குளமான பூச ஞான வாவி குளத்தின் நுழைவாயிலும் உள்ளன. மேற்குத் திருச்சுற்றில் விநாயகர், நாகர், சுப்ரமணியர்-வள்ளி-தேவசேனா சந்நதிகளும், வடக்குத் திருச்சுற்றில் சண்டீஸ்வரர் சந்நதியும் உள்ளன. கிழக்குத் திருச்சுற்றில் காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் வழிபட்ட தகவல் கல்வெட்டு மூலமாகக் காணக்கிடைக்கிறது. ஆலயத்தின் தலவிருட்சம் விளாமரமாகும். பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது.



இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு எதிரே அழகிய சிறிய ஆலயத்தில் விஜய விநாயகர் மேற்கு திசை நோக்கி அமர்ந்து தன் தந்தையை நோக்கியபடி அருள்பாலிப்பது தனிச் சிறப்புடையது. இந்த ஆலயத்தில் அட்சய திருதியை அன்று சனிபகவான் பலவித ஸ்தூல, சூட்சும வடிவங்களில் சிவபெருமானை நாள் முழுவதும் வழிபடுவதாக ஐதீகம். அட்சய திருதியை அன்று இங்கு இறைவனுக்கும், இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு அருள்பாலிக்கும் இறைவியான அபிவிருத்திநாயகி தன் பக்தர்கள் அனைத்து நிலைகளிலும் அபிவிருத்தி அடைய அருள்புரிகிறாள். இந்த ஆலயத்தை பொறுத்தவரை என்றுமே அட்சய திருதியைதான். என்றென்றும் அட்சய பாத்திரமாக அருளைச் சுரந்தபடி இருக்கிறார்கள் இறைவனும், இறைவியும்.



சனி பகவான் உடன் இருந்து வழிபடும் நாளான அட்சய திரிதியை நாளில் நாமும் அட்சய புரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க செல்வம் பெருகும். வாழ்க்கையில் வளம் கொழிக்கும் என்பது நிச்சயம்.

அட்சய திரிதியை அன்று இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சனி பகவானின் ஊனத்தை தீர்த்த இறைவன் அட்சய புரீஸ்வரர் தன்னை வணங்குவோரின் உடன் ஊனத்தையும், மன ஊனத்தையும் நீக்குவதுடன் ஏழ்மை என்னும் ஊனத்தை நீக்கி அவர்கள் வளம் பெற்று வாழ அருள் புரியக் கூடியவர் என்பது நிஜமே!

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top