பேராவூரணி மொய் விருந்தின் சிறப்புகள் ...

Unknown
0



பேராவூரணி மொய் விருந்தின் சிறப்புகள் மற்றும் ரூசிகர தகவல்கள்:
வீடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன அழைப்பிதழ்கள். வீதி தோறும் சிரித்துக் கொண்டிருக்கிறன பதாகைகள். மொய்விருந்து! ஆடி முடியற வரைக்கும் சோத்துக்குப் பஞ்சமில்லை.
கரண்டி வைத்து அண்ணமிடுவது சின்னத்தனமென எண்ணி தட்டு வைத்து இலை முழுவதும் சோறிடுவார்கள். சோற்றுக்குள் குளத்தை வெட்டி குளம் நிறையக் குழம்பை நிரப்பி வயிற்றுப் பாசானத்தை நிறைத்துக் கொள்ளலாம். என்ன ஒன்று, ஆடிமுடிந்து பார்த்தால் டவுசர் பை மட்டும் கடகடத்துப் போய்க் கிடக்கும்.
திறமையாகக் கையாளத் தெரிந்தவனுக்கு மொய்விருந்து ஒரு வரம். வட்டியில்லை. கடன்காரன் தொல்லையில்லை. முத்தூட், மனப்புறம் கோல்டுலோன் என எந்தப் பிக்கல் பிடுங்கல்களும் இல்லாமல் ஒரே நாளில் லட்சக்கணக்கில் பணத்தைப் புரட்டித் தரும் அற்புதமான வங்கி அது.
விவசாயத்திற்கு ஆழ்துழை கிணறு அமைக்கலாம். பிள்ளைகளைப் பொருளீட்ட வெளிநாடு அனுப்பலாம். சிறு-குறு தொழில் துவங்கலாம். ஒரு ஏக்கரில் நூறு குத்து மல்லிகையோ, கரட்டானோ பயிரிட்டால்க் கூடப் போதும். தினந்தோறும் வரும் வருமானத்திலிருந்து மொய்யை திருப்பி அடித்து விடலாம். ஐந்தாவது வருட முடிவில் லட்சக்கணக்கில் மீண்டும் ஒரு தொகை உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
எந்தவித அடமானமும் இல்லாமல், ஒரு கையெழுத்துக்கூட இல்லாமல் இன்றையத் தேதிக்கு லட்சக்கணக்கில் பணத்தை யார் தருவார்கள்? உங்கள் வரிப்பனதிலிருந்து விவசாயத்திற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் அரசாங்கம் கூட உங்கள் குண்டு, மணி, தாயத்து உள்ளிட்டவைகளை அறுத்து அடமானம் வைத்தால்த்தான் பத்துப் பைசாவாக இருந்தாலும் நீட்டும்.
இந்தப் பகுதியிலேயே அதிகபட்சமாக சமீபத்தில் அனவயலைச் சார்ந்த ஒருவர் நாலரைக்கோடி மொய் வாங்கியிருந்ததை தம்பி துரை. இராஜகுமரன் பதிவு செய்திருந்தார். சுற்று வட்டார கிராமங்களில் நம்மீது உறவுகள், நண்பர்கள் வைக்கும் நன்மதிப்பு மொய்ப்பணத்தை கனிசமாக கூட்டித்தரும்.
பெற்ற தொகையை நல்ல தொழிலில் முதலீடு செய்யும் 'மதிமுகத்' தந்திரம் அறிந்திருக்க வேண்டும். இந்த ரோடு என்ன வெல? அந்த வீதி என்ன வெல ரக கவுண்டமனி வகையறாக்கள் கூட தப்பித்துக்கொள்ள வழியுண்டு. 'போடுவேண்டா மேடையில கால மேல.. கொரங்குக்கிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை' எனக் கொண்டாடித் தீர்த்தால் தலையில் துண்டு போடுவது நிச்சயம். கோவிந்தா கோவிந்தா!
ஆதிகாலங்களில் திருமணங்களில் மணமக்களுக்கு பரிசு கொடுக்கும் வழக்கம்தான் இன்று இவ்வாறு மருவியிருக்கக் கூடும். மணமக்களின் மடியில் புதுத்துணி விரித்து மடிநிறைய குடும்பத்தின் பெரியவர்கள், உறவினர்கள் சில்லறைக் காசுகளைக் கொட்டும் வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நடைமுறையில் இருந்தது.
பின்பு 'பணவீக்க' வளர்ச்சியில் பரிசுப்பணத்தை குறித்து வைத்திருந்து திருப்பிச் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கலாம். இன்று திருமணத்திற்குச் சம்மந்தமில்லாத வகையில் இதன் நிறைகுறைகள் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு விவசாயிகளின், சிறு-குறு தொழில் துவங்குவோரின், வெளிநாடு வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் தேவைதீர்க்கும் எளிய வங்கியாக வளர்ந்து நிற்கிறது.
வடநாட்டுப்பக்கம் சீட்டுக்கம்பெனி நடத்தி சுருட்டிக்கொண்டு வந்தவர்கள் கருப்புப் பணத்தை புழக்கத்தில் விட பயன்படுத்தியதால்த்தான் மொய்விருந்து வளர்ந்தது எனும் குற்றச்சாட்டும் உண்டு.
ஐந்து வருடங்கள் வரை சிறுகச் சிறுக மற்றவர்கள் நடத்தும் மொய்விருந்துகளில் மொய்ப்பணம் வைக்க வேண்டும். இதுதான் மொய்விருந்தின் ஆரம்பகட்ட முதலீடு. ஐந்தாவது வருடம் நீங்கள் நடத்தும் மொய்விருந்தில் நீங்கள் செய்த மொய்ப்பணம் திரும்ப உங்களுக்கு இரட்டையாக வந்து சேரும். அதாவது நீங்கள் ஒருவருக்கு 1000ரூபாய் மொய் செய்திருந்தால் அந்த 1000ம் போட்டு கூடுதலாக புதுநடையாக 1000ம் உங்களுக்கு வந்து சேரும். மறுபடியும் அதே சுழற்சி!
நீங்கள் இந்த வருடம் மொய்விருந்து வைத்திருந்து, இந்த வருடம் உங்களுக்கு மொய் செய்தவரின் ஐந்தாவது வருடச் சுழற்சி அடுத்த வருடமோ, இடையிலேயே வர நேர்ந்தால் விகிதாச்சாரம் பார்த்து மொய் செய்யலாம்.
அதிகப்பிரசங்கித் தனமாக மொய்விருந்து வைத்திருந்த நாளிலிருந்து மூன்றாவது வருடமோ, இடையிலேயோ திரும்ப மொய்விருந்து வைத்தீர்களானால் 1000த்தோடு 50சேர்த்து 1050ஓவான்னு கணக்க முடிச்சிட்டுப் போய்ட்டே இருப்பானுக. நீ ஆணியே புடுங்க வேண்டாம் மொமென்ட். இந்த 1000 என்பது ஒரு உதாரனம்தான். தகுதிக்குத் தகுந்தாற் போல் லட்சம் பத்துலட்சமென மொய்யெழுதி திகிலடிக்கிறார்கள்.
எனினும், என்னைக் கேட்டால் ஒருவருக்கு 500 ரூபாய்க்குள் மொய் செய்வதே இந்த மொய்விருந்து முறை உயிரோடிருக்க நல்ல வழிமுறை என்பேன். திருப்பிச் செலுத்துவதும் சுலபம். வாங்கும் போது இனிப்பாக இருக்கும் லட்சங்கள் திருப்பிச் செலுத்தும் போது கடுப்பேற்றும். திடீரென ஒருலட்சம் இரண்டு லட்சத்தை எங்கிருந்து புரட்டுவது? இந்த வினையால்தான் கொள்ளைப்பேரு மண்டயப் பிச்சுக்கிட்டு நிக்கறாய்ங்கெ.
கிட்டத்தட்ட பத்துப்பேர் வரை மொத்தாமாகச் சேர்ந்து கொண்டு ஒரே இடத்தில் மொய்விருந்தை வைப்பார்கள். கொஞ்சம் கிழக்குப் பகுதிப் பக்கம் போனால் வாக்காளர்பட்டியல் நீளத்திற்கு பத்திரிக்கை நீள்கிறது. நானறிந்து 26பேர் வரை கூட்டாக வைத்ததை அறிந்திருக்கிறேன்.
கூட்டுத்தேவையாக வைப்பதால் செலவு வெகுவாகக் குறையும் என்பதால் இந்த ஏற்பாடு. சிலர் 7000ரூபாய்க்குள் செலவு செய்து 15,00,000வரை மொய்வாங்கிய நிகழ்வும் உண்டு. 26பேரின் உற்றார் உறவினர் நண்பர்கள் கூட்டம் நிரம்பிய சாப்பாட்டுப் பந்தி எப்படிக் காட்சியளிக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். பாகுபாலியில் காளகேயர்கள் படை ஆக்ரோசத்துடன் கத்திக்கொண்டு முன்னேறும் காட்சி கண்முன் விரிகிறதா? அஃதே!
தானவநாட்டுக் கிராமங்களின் மேல்பகுதிக் கிராமங்களில் இந்த எண்ணிக்கை 10ஐ ஒட்டியே இருப்பதால் இந்தப் பக்கம் போர்களம் சற்று சிறியதாகவே இருக்கும். சுலபமாக களமாடி விடலாம்.
சாதாரனமாகப் பார்த்தால் தனிநபர்களுக்கான முதலீட்டும் நிகழ்வாகத் தெரிந்தாலும் இந்த மொய்விருந்தின் பின்னால் இன்று ஒரு பெரும் வேலைவாய்ப்பு, தொழில் சக்கரமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பத்துப் பேர் கொண்ட ஒரு மொய்விருந்திற்கு 400கிலோ வரை கறி போடுகிறார்கள். இந்தப் பகுதிகளில் வருடம் முழுவதும் வளர்க்கப்படும் ஆடுகள் விற்றுத் தீர்ந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் இறக்குமதியாகிறது.
போன வருடத்திலிருந்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆடுவளர்ப்பாளர்கள் ஆடிமாத மொய்விருந்திற்கு விற்பதற்காகவே மேற்பனைக்காடுப் பகுதியில் கிடை அமைத்திருப்பதாகக் கேள்வி. ஆடு வியாபாரிகள் துவங்கி கிடாய் உரிப்பவர்கள் வரை இந்த மாதம் முழுவதும் ஆலாய் பறந்து கொண்டிருப்பார்கள்.
இலை வியாபாரிகள், பத்திரிக்கை அச்சடிப்பவர்கள், பத்திரிக்கை விநியோகிப்பவர்கள், சமையல் கலைஞர்கள், மொய் எழுத்தாளர்கள், மண்டப உரிமையாளர்கள், வாடகைப் பாத்திரக்கடை, மைக்செட் துவங்கி துப்புறவுத் தொழிலாளர்கள் வரை ஆடி முழுவதும் வேலை இருக்கிறது. சமீப வருடங்களில் வீதிநிறையப் பதாகை வைப்பதும் பாரம்பரியத்தில் இணைந்திருக்கிறது.
மறைமுக வேலைவாய்ப்பாக துணி வெளுத்துக் கொடுக்கும் சலவை நிலையம் துவங்கி, அரசின் கொள்ளைக் கூடமான டாஸ்மார்க் வரை கூட்டம் தள்ளி விலக்க இயலாது. சிலருக்கு உற்சாக பானம் உள்ளே இறங்காமல் கறிசோறு உண்பதென்பது பிறவிக்கேடாக மனதில் பதிந்து தொலைத்ததால் டாஸ்மார்க் என்றும் பதினாறு. போட்ட போதைக்கு கறி சரியாக இலையில் விழவில்லை என்றால் கண்ணு சிவக்கும். கரண்ட்பாக்ஸ் வெடிக்கும். கொழம்புச் சட்டி பறக்கும்.
மொய்விருந்தின் சிறப்பே அந்த கறிக்குழம்பு வாசம்தான். அந்த வாசத்தை இந்தப் பகுதியில் மட்டுமே நுகரலாம். எத்தனை சென்னை அமிர்தாக்கள் கடைவிரித்தாலும் கைகூடாத அந்த திறமை இப்பகுதி சமையல் கலைஞர்களுக்கு உண்டு. அதிலும் அந்த ரசமெல்லாம் உலகத்தரம். அடித்துச் சொல்லலாம்.
பாண்டிக்குடிப் பகுதி சமையல் கலைஞர்கள் இதில் பிரசித்தி. சமையல்காரர்களின் வசதிக்குத் தகுந்த நாளில் மொய்விருந்து நாளை மாற்றி அமைப்பதெல்லாம் இங்கு சாதாரன நிகழ்வு. விருந்து வைப்பதில் அவ்வளவு கவனம் செலுத்தப் படும்.
கடந்த வருடம் காஞ்ச கருவாடு போல் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த பசங்க ஆடி முடிந்து திரும்பிப் போகும்போது செனைப்பன்னி போல் போனது மொய்விருந்தின் கைங்கர்யமன்றி வேறில்லை.
மொய்விருந்து நடத்துபவர்களுக்கு விதிக்கப் பட்டது போல் சாப்பாட்டுக்கு வருபவர்களுக்கு என பெரிதாக இன்னும் வரையறை நிர்னயிக்கப்பட வில்லை. ஒரு வெள்ளை வேட்டி சட்டை. பையில் கொஞ்சம் பணம்.
சோத்துல கைவைச்சாலும் வைப்போமே ஒழிய மொய் வைக்கமாட்டோம் எனும் கொள்கைவாதிகளும் வெளியில் தெரியாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். யாரு வெத்தலயில மைபோட்டுப் பாத்துக்கிட்டு இருக்காய்ங்கெ? வாங்க வாங்கனு வாசப்படியில நின்னு வாய் நெறையக் கூப்பிடுவாங்க
எனினும், சமீப காலங்களில் உணவுகளில் வித்தியாசம் தெரிவதை உணர முடிகிறது. உண்டு முடித்தவுடன் கள்ளுண்ட வண்டாய் உறக்கம் கண்ணைச் சுழற்றுவது ஏன் என்பது புரியவில்லை. தூக்கமாத்திரை எதுவும் கலக்கறீங்களா ராசாக்களா? படுத்தா செத்த பொனம் கணக்கா எழமறுக்கிறதே உடம்பு? நவீன நுகர்வுக் கலாச்சாரம் படுத்தும் பாடு என நினைக்கிறேன். எசென்ஸா?
அதிலும் உணவுக்குப் பின் 7up அருந்தும் பழக்கமெல்லாம் மெதுவிசம். சுண்ணாம்பு கொஞ்சமா வச்சு வெற்றிலை போடுங்க மக்கா.
சோடாஉப்புக்கள் கலப்பது சர்வசாதாரனம் எனவேறு பீதியைக் கிளப்புகிறார்கள். விருந்துக்கு வர்ரவனுக்கு சொர்க்கலோகத்தை காட்டிடாதீங்க புண்ணியவான்களே.. 
சிறிய பெட்டிக்கடை முதல் பெட்ரோல் பங்க் உட்பட அரசு எந்திரம் டாஸ்மாக் மட்டும் கோடிக்கணக்கில் புரளும் பணம்.
ஆப்செட், பிளக்ஸ் பிரிண்டர்கள், சமையல் தொழிலாளர்கள், மொய் எழுத்தாளர்கள், ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள் வரை பல்வேறு தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கிறது. பேராசையிலோ அல்லது நடைமுறை சிக்கலால் தவிக்கும் ஒன்றிரண்டு பேர்களின் புலம்பல்களை தவிர்த்து பார்த்தால் நல்ல விசயம் தானே ( we support " MOI VIRUNTHU" )
*இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்த மொய் விருந்தை வேறு எங்கும் நடத்த இயலாது,நேர்மை நாணயம் உள்ள எங்கள் கிராமங்களில் மட்டுமே நடத்த இயலும்..
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top