தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம், கடல் பசு பாதுகாப்பகம் பாக் நீரிணை, ஓம்கார் பவுண்டேஷன், இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள மனோராவில் கடல் பசு பாதுகாப்பு தொடர்பான, மீனவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர் சிவசங்கர் வரவேற்றார். ஓம்கார் பவுண்டேஷன் அன்பு, இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியாளர் அருண் சங்கர், உதவியாளர் பிரவீன் ஆகியோர் கடல்பசுக்களை பாதுகாப்பது குறித்தும், கடல்பசுக்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் விளக்கிப் பேசினர்.
நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர்கள் நவநீதன் சுப்பிரமணியன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,
பள்ளத்தூர், ராஜா மடம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அதிராம்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேதுபாவாசத்திரம், ரெண்டாம் புலிக்காடு, புதுத் தெரு, குப்பத்தேவன், செந்தலைவயல், கரையூர் தெரு உயர்நிலைப்பள்ளி கள் என 10 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மீனவர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று கடல்பசுக்களை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் ஆராய்ச்சி உபகரணங்கள் குறித்த கண்காட்சி மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், கடல் பசு தொடர்பான விழிப்புணர்வு வினாடி - வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.