இன்று உலக பூமி தினம்.

Unknown
0

பூமியின் வடதுருவத்தின் வசந்த காலமும், தென்துருவத்தின் இலையுதிர் காலமும்
ஏப்.22ல் ஒரே நாளில் ஆரம்பிக்கிறது. அதை மையப்படுத்தியே ‘பூமி தினம்’ கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ‘பூமி தின’ தலைப்பு ‘பருவநிலை மாற்றம்’. ‘சுற்றுப்புறம் சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்’ என்ற மையக்கருத்துடன் துவங்கி உள்ளது. பள்ளிப்பருவத்தில் நாம் படித்த பாடம்தான் இது; ஆனால், பாடத்தை தேர்வோடு நிறுத்தியதன் விளைவு, பூமி பாடாய் படுகிறது. பூமியுடன் நாமும் சேர்ந்து படுகிறோம்.
வெப்பம் தகிக்கிறது. தீர்வைத் தேடி செல்ல வேண்டிய காலகட்டம் இது. தீர்வுக்கு வழி காட்டுகின்றனர் வல்லுனர்கள்; பின்பற்ற வேண்டியது நம் கடமை.
மாற்று சக்திக்கு மாறுங்க!

பேராசிரியர் ராஜேஷ், விலங்கியல் துறை, மதுரை அமெரிக்கன் கல்லுாரி
ஆண்டுதோறும் ஒன்றரை கிரகத்துக்குரிய (கோள்) வளங்களை, பூமியில் இருந்து சுரண்டிக்
கொண்டிருக்கிறோம். பூமியும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. வளம் அழியாமல் பாதுகாக்க காற்று, சூரியசக்தி போன்ற மாற்று சக்திக்கு மாறவேண்டும். பருவநிலையை நம்பியே நம்நாடு
உள்ளது. பொருளாதாரத்திற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதில் ஆற்றலை சேமிக்கலாம். ‘டிவி’, ‘ஏசி’யை ‘ரிமோட்’டில் அணைக்கிறோம்; ‘சுவிட்ச்’ அணைக்காமல் மின்ஆற்றலை வீணாக்குகிறோம்.
உலகளவில் சுற்றுப்புறத்தை பேணுவதில் நம்நாடு 155வது இடத்தில் உள்ளது. புவி வெப்பமாவதன் காரணத்தை, இன்றைய தலைமுறையினரிடம் கல்வியாக கொண்டு செல்லும் போது மாற்றம், தீர்வு கிடைக்கும்.


நல்ல குடிநீருக்கு வழி…

பேராசிரியர் கண்ணன், சுற்றுச்சூழல் துறைத்தலைவர், மதுரை காமராஜ் பல்கலை.,
குடிநீர் தரநிர்ணய ஆணையத்தை, 2002ல் மத்திய அரசு நிறுவியது. அரசியலமைப்பு சட்டம் 47 விதியின் படி, சுத்தமான, போதிய குடிநீரை வழங்குவது அரசின் கடமை. தரமான குடிநீர் ஏன் கிடைக்கவில்லை? என்பதை யோசிக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தொழிற்சாலைகளை நிறுவுவது, விவசாய நிலம், காட்டை அழித்து மேம்படுத்துவது, தொழில்நுட்பம் சார்ந்த நீர் மேலாண்மை குறைபாடு போன்றவையே நீர் தரக்குறைவுக்கு காரணம்.
வளமான இடத்தில் தொழிற்சாலை அமைத்து, இவற்றின் கழிவுகளை நீர் நிலைகளில் சேர்க்கும் போது, நீர்நிலையோடு நிலத்தடி நீரையும் பாழ்படுத்துகிறது. ஆனால், 85 சதவீத குடிநீர் நிலத்தடி நீரின் மூலம் கிடைப்பதால், தரமான குடிநீர் கேள்விக்குறியாக உள்ளது.
‘எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் பூமியில் இருந்து எடுக்கலாம். அதை கழிவுநீராக
மாற்றலாம்’ என்று கட்டுப்பாடற்ற தன்மை இருக்கிறது. இவற்றை கட்டுப்படுத்தினால், பூமிக்கு தேவையான நீர்இருப்பை உறுதிசெய்ய முடியும்.


சுரங்கங்களை நிரப்புங்க!
அருணாச்சலம், பொதுப்பணித்துறை சிறப்பு முதன்மை பொறியாளர் (ஓய்வு), மதுரை
பூமியை காக்க அதிலுள்ள ஆறுகள், கண்மாய்கள், ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும். அந்தந்த ‘ஆயக்கட்டுதாரர்’ எனும் பாசனதாரர்களிடம் முழுவதுமாக ஒப்படைத்து விட்டு, அரசு விலகிவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் கண்மாயை துார்வாரி மழைநீரை சேமிக்கும் வாய்ப்பு உருவாகும்.
ஆறுகளில் மணலை கொள்ளையடிப்பதால் அவை மழைநீரை உறிஞ்சி வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. எந்த காலத்திலும் கிடைக்கக்கூடிய மழைநீரை முறையாக வடிகட்டி, வீடுகளில் குடிநீராக பயன்படுத்தலாம். மீதமுள்ள தண்ணீரை ஆழ்துளை கிணறு களில் செலுத்தினால், ‘தண்ணீர் சுரங்கங்களில்’ தண்ணீர் சேர்ந்து கொண்டே இருக்கும். நாம் எடுக்கும் தண்ணீருக்கு பதிலாக மழைநீரை நிரப்பி ‘தண்ணீர் சுரங்கங்களை’ நிரப்பிக் கொண்டே வந்தால், தண்ணீர் கஷ்டம் வராது. அரசையும் எதிர்பார்க்க வேண்டாம்.


இனிய இயற்கை விவசாயம்

மனோரஞ்சிதம், விவசாய அலுவலர், கன்னியாகுமரி
ரசாயன பூச்சிக்கொல்லி, உரங்களை பயன்படுத்தி பூமியின் கர்ப்பப்பையை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மண்ணை கடவுளாக மதித்து நெற்றியில் இட்டு, தண்ணீரை தீர்த்தமாக பயன்படுத்தினோம். தற்போது மண்ணையும், நீரையும் மாசுபடுத்துகிறோம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தி, உயிரினங்களையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இதை தடுக்க, இயற்கை விவசாயப் புரட்சிக்கு தயாராக வேண்டும். பசுந்தாள் உரங்கள், பசுந்தளை உரங்கள், மண்புழு உரங்கள், தாவர பூச்சிக்கொல்லி என இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும். பயிர் சுழற்சி முறை, சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், சூரியசக்தி மோட்டார் மூலம் இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.


இயற்கை தான் எதிர்காலம்

பேராசிரியை கலைச்செல்வி, சுற்றுச்சூழல் துறை, கோவை வேளாண் பல்கலை.,
தொழிற்சாலை மற்றும் நகரங்களில் வெளியேறும் கழிவுநீர், நீர்நிலைகளில் விடப்படுகிறது. பல ஆலைகளில் சுத்திகரிப்பு கட்டமைப்பு செய்வதில்லை. நேரடியாக நீர்நிலைகளில் கழிவுகளை விடுவதால், எந்த நீரையும் நேரடியாக குடிக்க முடியவில்லை.2011 ம் ஆண்டு இதே
பூமி தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 2.8 கோடி மரங்களை நட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மரங்களின் அவசியத்தை நாம் முதலில் உணர வேண்டும். இயற்கையும், எதிர்
காலமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இயற்கை அழிய அழிய நம் எதிர்காலமும் அழிகிறது. இயற்கை வளங்களை, அடுத்த சந்ததிக்கும் விட்டுச் செல்ல வேண்டும்.


கார்பனை கரைக்கும் மரங்கள்

வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்
பூமியைத் தவிர மனிதர்களோ, ஜீவராசிகளோ வாழும் தடயம் வேறெந்த கோளிலும் இல்லை. நீர், காற்று தான் நம்மை வாழ வைக்கிறது. இன்றைய சூழ்நிலையில் நீரும், காற்றும் சுத்தமாக இல்லை. கிராமத்து தெருக்களும் சிமென்ட் ரோடாகி விட்டதால் மழைநீர் பூமிக்குள் செல்வதில்லை. ஏதோ ஓரிடத்தில் தண்ணீர் தேங்குவதால், எல்லா இடத்திலும் தண்ணீர் கிடைக்காது. அதீத பாலிதீன் பயன்பாட்டால் பூமிக்குள் நிலத்தடி நீர் ஊடுருவிச் செல்லாமல் மேற்பரப்பில் தங்கி ஆவியாகிறது. பாலிதீன் பயன்பாட்டை முழுமையாக குறைக்க முடியாவிட்டாலும் மறுசுழற்சி செய்யும் போது, தானாகவே குறைந்துவிடும்.
பருவமழை பொய்த்ததற்கு காரணம் பருவநிலை மாற்றம். ஐந்து ஆண்டு கால வெப்பநிலை யுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ வருவதற்கு பதிலாக, ஏப்ரலிலேயே வந்து விடுகிறது. சித்திரை முதல் வாரத்தில் ‘அக்னி நட்சத்திரம்’
அதிகமாக உள்ளது. இதற்கும் பருவநிலை மாற்றம்தான் காரணம். ‘மேலும் இரண்டு டிகிரி வெப்பநிலை அதிகரிக்கக்கூடாது’ என்பதற்காகத் தான் 1970ல் இந்த விழிப்புணர்வு தினம் உருவாக்கப்பட்டது. இன்று சாத்தியமா? என தெரியவில்லை.இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
வேற்று கிரகவாசிகளோ, ‘ஏலியன்’களோ வந்து பூமியை பாதுகாக்கமுடியாது.
மரங்களின் இலை, தழை மட்கும் போது மண்ணுக்குள் கார்பனாக தேங்கும். வேர், தண்டு, இலை அனைத்திலும் கார்பன் உள்ளது. கார்பன் கூடாரங்கள்தான் மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வனங்கள் இயற்கை நமக்கு கொடுத்த செல்வம். வனம், வளங்களை பாதுகாக்கவேண்டும்.
வனத்திற்கு தீ வைக்கும் போது, மரங்கள் மண்ணில் சேகரித்து வைத்த கார்பன், மீண்டும் வளிமண்டலத்திற்கு சென்று, பூமியை அதிகமாக வெப்பப்படுத்துகிறது. மரங்கள் வளர்ப்பதன் மூலமே அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடியும். மரம் நடுதலே, விழிப்புணர்வின் முதல்படி. வளிமண்டலத்தில் நாம் அனுப்பிய கார்பனை, மீண்டும் மரங்களே எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top