![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3xgLb5NkABwENKIeWpwnxeiSo7VsUKFCnjZUO8W9jhB8T3VYaS_PEqNB9YDYEc_st1mkA_VoBsbcmqDQoUrV1KLq1zqKLGvl5x5W6XgFt-aZu60cibPGUfd5kGpmDAj4ScfyI84bEnho/s1600-rw/PVITOWN-2017-11-26-16-18-42-056.png)
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. முரளிவிஜய், புஜாரா இணை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிரணி பவுலர்களை சோர்வடையச் செய்தது. களத்தில் நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியை இலங்கை பவுலர்களால் அவ்வளவு எளிதில் அசைத்து பார்க்க முடியவில்லை. இருவரும் சதம் அடித்து அபாரம் காட்டினர்.
அணியின் ஸ்கோர் 216 ரன்களாக உயர்ந்த போது, இந்த கூட்டணியை ஒரு வழியாக ஹெராத் உடைத்தார். அடுத்து நுழைந்த கேப்டன் விராட் கோலி தன்னுடைய போக்கில் அடிக்க தொடங்கினார். அவரது பந்து வீச்சில் விஜய் (128 ரன், 221 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்த போது தில்ருவான் பெரேரா கேட்ச் செய்தார். நேற்றை ஆட்ட நேர முடிவில் இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 312 ரன்களுடன் வலுவான நிலையை எட்டியது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டமும் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்விதமாக இருந்தது. கேப்டன் விராட் கோலி ஆதிக்கம் செலுத்தினார். விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 19-வது சதத்தை அடித்தார். அவருடன் எதிர்முனையில் விளையாடி வந்த புஜாரா 124.5 வது ஓவரில் 143 ரன்களில் அவுட் ஆனார். (362பந்துகள் 14 பவுண்டரிகள்) இதனையடுத்து களமிறங்கிய ரெஹானே இரண்டு ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இலங்கை அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். இந்திய அணியின் ரன் கணக்கு இலங்கையைவிட 300 ரன்களை தாண்டி சென்றது. விராட் கோலியும் இரட்டை சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விராட் கோலிக்கு மைதானத்திலே ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டை தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்தனர். விராட் கோலி டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 5வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
169.5 வது ஓவரில் விராட் கோலி 213 ரன்களில் (267 பந்துகள், 17 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அவுட் ஆனார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய அஸ்வின் 5 ரன்களில் அவுட் ஆனார். ரோகித் சர்மா 102 ரன்களுடனும், விருதிமான் சாஹா ஒரு ரன்னுடனும் விளையாடிய போது இந்தியா டிக்ளேர் செய்தது. 6 விக்கெட்கள் இழப்பிற்கு 610 ரன் கள் எடுத்து இருந்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்து உள்ளது. இலங்கை அணியவிட 405 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.