ஆங்காங்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டுங்குழியுமாக உள்ள இச்சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடையநாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஏராளமான மாணவர்கள் இவ்வழியே சென்று வருகின்றனர். மேலும் பேராவூரணிக்கு மருத்துவமனை, அரசு அலுவலகங் கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏராளமானோர் தினசரி பயணிக்கின்றனர். மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் இருந்து, தினசரிஏராளமான வாகனங்கள் கடல் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பயணிக்கின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தஇச்சாலை வழியே செல்லும் பேருந்துகளுக்கு பின்னால் எவரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இவ்வழியாக தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள், நகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் சென்று வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில், “ நான்கைந்து ஆண்டுகளாகவே இந்த சாலைசீரமைக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சரிசெய்யப்படாமல் உள்ளது. உடனடியாக சாலையை சீரமைக்காவிட்டால், மக்களை திரட்டி பூக்கொல்லை கடைவீதியில் சாலைமறியல் நடத்தப்படும்” என்றார்.
