தஞ்சாவூர், ஜூன்.22 -
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, தஞ்சை உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், அதிராம்பட்டினம் கரையூர் பகுதியில் நடப்பட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள், சம்பைப்பட்டினம் காப்புக் காட்டில் நடப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகள், அடைக்கத்தேவன் கடற்கரை பகுதியில் நடப்பட்ட பனை மரக்கன்றுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடலுக்குள் விசைப்படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்