பேராவூரணி அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் கற்றல் களப்பயணம்
தஞ்சாவூர், ஏப்.22 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு இளங்கலை வேளாண் அறிவியல் மாணவிகள் கிராம அனுபவத் திட்டத்தின் கீழ் செங்கமங்கலம் விவசாயிகளுடன் தங்கி வயலில் நிலக்கடலை அறுவடை செய்தனர்.
மேலும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் திருமால் கண்ணன், பேராசிரியர் வினோதா மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் செந்தாரகை மற்றும் பேராசிரியர் லேகா பிரியங்கா ஆகியோரின் வழிகாட்டுதலின் மூலம் நிலக்கடலை அறுவடையினை மாணவிகள் செய்து முடித்தனர்.
மேலும், மாணவிகள் விவசாயிகளுடன் இணைந்து, கடலை சாகுபடி வயலில் எவ்வாறு அறுவடை செய்தல் வேண்டும் என்ற வழிமுறையை எளிதாக கற்றுக் கொண்டனர். அவை முதிர்ந்த இலைகள் காய்ந்து மஞ்சள் நிறமாகி கருப்பு நிற புள்ளிகள் தென்படும்.
செடியை பிடுங்கி பார்த்தால் கடலைப் பருப்புகள் முற்றியும், அவற்றின் ஓடுகள் கருப்பு நிற கோடுகளுடனும் காணப்படும்.
அந்த சமயத்தில் தண்ணீர் பாய்ச்சி கடலை செடியை அறுவடை செய்யலாம் என்பதை அறிந்து கொண்டனர். பிறகு மாணவிகள் நிலக்கடலை சாகுபடியில் வரும் பூச்சித்தாக்கம், சிவப்பு கம்பளிப் புழு, பச்சைப் புழு , அசுவினி குறித்தும், இலை புள்ளி நோய், தண்டு அழுகல், வேர் அழுகல் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், அவற்றை கட்டுப்படுத்தும் இயற்கை மேலாண்மை முறைகளையும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர்.