பேராவூரணி, ஏப் 16 தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15-ம் தேதி) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15-ம் தேதி) முதல் மீன் பிடித் தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்களது படகுகளை கரையில் ஏற்றி பராமரிப்பு பணிகளை தொடங்க உள்ளனர். வங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமாக அறிவித்து, மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதித்து வருகின்றன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 150 விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதையடுத்து படகுகளை கரைகளுக்கு கொண்டு வந்து, அதில் பராமரிப்பு பணிகளை தொடங்குவது வழக்கம். மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இன்றி காணப்படுவர்.