பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்று வரும், பெற்றோரை இழந்த மாணவிகள் 20 பேருக்கு, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், புத்தாடைகள், நோட்டுப் புத்தகம், பேனா என ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் இணைந்து சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், அறக்கட்டளையின் சார்பில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பெற்றோரை இழந்த 20 மாணவிகளுக்கு, ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் நோட்டு புத்தகங்கள் பேனா ஆகியவற்றை அறக்கட்டளை தலைவர் நீலகண்டன், செயலாளர் மகாராஜா, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர். முன்னாள் பொறுப்பாளர்களான தாமரைச்செல்வன், முஜிபுர் ரஹ்மான், ஏகாம்பரம், திருநீலகண்டன், ராஜ்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். உதவி வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) எம்.காளீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் பி.லெட்சுமி, டி.புவனேஸ்வரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.