பேராவூரணி, ஜன. 29- பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் ஸ்ரீ பட்டயத்து ஐயனார் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கொன்றைக்காடு கிராமத்தில் ஸ்ரீ பூரண புஷ்காலம்பாள் சமேத ஸ்ரீ பட்டயத்து ஐயனார் ஸ்ரீ கொன்றை மகா காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், ராஜகோபுரம் பஞ்சவர்ண பொலிவுடன் திருப்பணிகள் செவ்வனே செய்விக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கண்ணைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில், கடந்த 26ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 27ம் தேதி 2ஆம் கால யாகசாலை பூஜையும், 3ஆம் கால யாகசாலை பூஜையும், நேற்று 28ம் தேதி புதன்கிழமை 4ஆம் கால யாக பூஜை தொடங்கி, காலை 10.25 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கொன்றைக்காடு, பெரியகள்ளங்காடு, காலகம், ஆயிங்குடிதெற்கு, மேலமணக்காடு, கீழக்காடு ஆகிய கிராமங்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீ பூரண புஷ்காலம்பாள் சமேத ஸ்ரீ பட்டயத்து ஐயனார் ஸ்ரீ கொன்றை மகா காளியம்மன் ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ அசோக்குமார், ஆறு கரைகாரர்கள், கொன்றைக்காடு, பெரியகள்ளங்காடு, காலகம், ஆயிங்குடிதெற்கு, மேலமணக்காடு, கீழக்காடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
