பேராவூரணியில் தேரோடும் பாதைகளில் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் டி.பிரகாஷ், உதவி மின் பொறியாளர்
என்.ஹரிசங்கர் ஆகியோர் மேற்பார்வையில், சிறப்பு நிலை ஆக்க முகவர் ஆர்.சுரேஷ், மின்பாதை ஆய்வாளர் ஆர்.கணபதி சுப்பிரமணியன் மற்றும் மின் ஊழியர்கள் மூன்று இடங்களில் பூமிக்கு அடியில் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை ஃபைபர் கேபிள் மூலம் புதைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதற்காக மூன்று இடங்களில், சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இனி வரும் தேரோட்டத்தின் போது மின் கம்பிகளை துண்டித்து அகற்றும் சிரமம் இருக்காது என்பதும், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையும் தவிர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கடைவீதி வர்த்தகர்கள், அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
