தஞ்சாவூர், பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் துரை. நீலகண்டன் எழுதிய, 'தூங்காத இரவுகள்' என்ற நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது 'மக்கள் மருத்துவர்' மருத்துவர் துரை. நீலகண்டனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசால் கொண்டாடப்படும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளான பிப்.19 ஆம் தேதி வியாழக்கிழமை, சிறந்த தமிழ் நூலாசிரியர்களுக்கான பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு விருதினை வழங்கிச் சிறப்பித்ததார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டணர்.
